×

‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் 3 பேர் பலியான விவகாரம் ‘செட்’ , கிரேன் உரிமையாளரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

சென்னை: நடிகர் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பலியான விவகாரத்தில், திரைப்படத்திற்கு செட் அமைத்த நிர்வாகிகள் மற்றும் விபத்துக்குள்ளான கிரேன் உரிமையாளர் மற்றும் டிரைவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். நடிகர் கமல் நடிப்பில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக செட் அமைத்து நடந்து வருகிறது. அதன்படி கடந்த 19ம் தேதி இரவு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, பாரம் தாங்காமல் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த கிரேன் அறுந்து கீழே விழுந்தது. இதில், அங்கு பணியில் இருந்த உதவி இயக்குநர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் படக் குழுவைச் சேர்ந்த 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கோர விபத்து குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, ஈ.வி.பி. பிலிம் நகரில் பிரமாண்டமாக செட் அமைக்க முறையாக திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சென்னை மாநகர காவல் துறை அல்லது மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி நசரத்பேட்டை காவல்நிலையத்தில் இருந்து மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதி நியமிக்கப்பட்டார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை செம்பரம்பாக்கம் ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் தனது விசாரணையை தொடங்கினார்.

இந்நிலையில் முறையாக அனுமதி இல்லாமல் இந்தியன் 2 படப்பிடிப்புக்கு செட் அமைத்ததாக அதன் நிர்வாகிகள் மற்றும் தொழிற்சாலையில் பயன்படுத்தும் கிரேனை படப்பிடிப்புக்கு வாடகைக்கு விட்ட அதன் உரிமையாளர் மற்றும் கிரேன் ஆபரேட்டர் ராஜன் ஆகிய 6 பேரை ேநற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். அதற்கு அவர்கள் அளித்த பதிலை தனித்தனியாக வாக்குமூலமாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெற்றுக்கொண்டனர்.

Tags : Crane ,Central Criminal Police ,shooting ,Central Criminal Investigation Department ,India , shooting , Indian 2, 3 people , killed, Central Criminal Investigation Department
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...