டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரிப்பு: கலவரம் கட்டுக்குள் உள்ளது என அமித்ஷா அறிவிப்பு

டெல்லி: டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது. வடகிழக்கு டெல்லியில் மாஜ்பூர், பாபர்பூர், இப்ராபாத் , புஜன்புராவில் கல்விச்சு தீ வைப்பு சம்பவங்களால் பதற்றம் நிலவி வருகிறது. குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே 3-வது நாளாக மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. இம்மோதல்களில் 160-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக 2 மாதங்களாக அமைதியான தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இப்போராட்டக்காரர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆனாலும் போராட்டம் அமைதியாக தொடருகிறது. இந்நிலையில் வடகிழக்கு டெல்லி பகுதிகளான ஜாபராபாத், மெளஜ்பூர், சந்த்பாக், குர்ஜிகாஸ் மற்றும் பஜன்புரா பகுதிகளில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. அதேநேரத்தில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள் இதற்கு எதிராக களமிறங்கினர். இதனால் இருதரப்புக்கும் இடையே பயங்கர மோதல்கள் வெடித்தன. இதில் போலீசார், பள்ளி வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

பலரும் படுகாயமடைந்தனர். இம்மோதல்களில் ரத்தன்லால் என்ற போலீஸ்காரர் உட்பட 7 பேர் பலியாகினர். 160-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். போலீஸ் அதிகாரிகள் சஹத்ரா, அமித் ஷர்மா, அனுஜ் குமார் உள்ளிட்டோரும் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த கலவரத்தில் ஏற்பட்ட உயிரிழப்பின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. கஜூரி காஸ் பகுதியில் போலீசாரும் விரைவான அதிரடி படையினரும் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

கட்டுக்குள் உள்ளது: அமித்ஷா

கலவரம் பாதித்த டெல்லியில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் பாதுகாப்புப் பணியில் போதிய போலீஸ், துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார். டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தால் மூன்றாவது நாளாக வன்முறை நீடித்து வருகிறது. நிலைமையை கட்டுப்படுத்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை நடத்தினார்.

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என போலீஸ் அறிவிப்பு

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என டெல்லி போலீஸ் வேண்டுக்கோள் விடுத்துள்ளது. டெல்லி கலவரத்தை ஒடுக்க துணை ராணுவப் படையின் 35 படையணி வீரர்கள் பணியில் ஈடபடுத்தப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு்ள்ளது. அரசியல் கட்சிகள் வன்முறைகளுக்குத் தூபம் போடும் விதமான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: