மற்ற மாநிலங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ள ஹஜ் பயண இடங்களை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை : தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும் என மத்திய அரசை முதல்வர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இந்தியாவை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை மத்திய அரசு ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ் அழைத்து சென்று வருகிறது. இந்நிலையில் ஹஜ் பயண ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள 6,028 விண்ணப்பங்கள் இந்த ஆண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் மத்திய அரசு 3,736 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளதை கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டு உள்ளார். மற்ற மாநிலங்களில் மத்திய அரசின் இட ஒதுக்கீடு பயன்படுத்தப்படாமல் இருப்பதால் அந்த ஹஜ் பயண இடங்களை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். எனவே இந்த ஆண்டில் ஹஜ் பயணத்துக்கு தமிழக ஹஜ் கமிட்டி பரிந்துரைத்த 6,028 பேரின் பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்று சிறுபான்மை விவகார அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் வாயிலாக முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: