மெட்ரோ ரயில் நிலையங்களில் இ-பைக் சேவை விரிவாக்கம்: அதிகாரி தகவல்

சென்னை: இ-பைக் சேவையை அதிகரிக்க ஏதுவாக மெட்ரோ ரயில் நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ சேவையையும், 5 நிலையங்களில் ஷேர் டாக்சி சேவையையும், 15 நிலையங்களில் வாகன இணைப்பு சேவையையும் செயல்படுத்தி வருகிறது.இதேபோல், முழுவதும் மின்சாரத்திலேயே இயங்கும் வகையினாலான இ-பைக் சேவையை கடந்த ஜனவரி மாதம் கிண்டி, ஆலந்தூர், வடபழனி, நந்தனம், சின்னமலை மற்றும் அண்ணாநகர் ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் நிர்வாகம் அறிமுகம் செய்தது. ‘வோகோ’ மற்றும் ‘ப்ளை’ ஆகிய இரண்டு தனியார் நிறுவனத்துடன் இணைந்து இச்சேவையை நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. இதற்கு நிமிடத்திற்கு 1 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

இந்நிலையில், இந்த சேவைக்கு பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதால் மேற்கொண்டு எந்தெந்த நிலையங்களில் இச்சேவையை அறிமுகம் செய்யலாம் என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக மெட்ரோ ரயில்வே அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:  6 மெட்ரோ ரயில் நிலையங்களில் செயல்படும் இச்சேவையை நாள்தோறும் 200க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக நிமிடத்திற்கு 1 மட்டுமே கட்டணம் என்பதால் இச்சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. கிண்டி, ஆலந்தூர், வடபழனி, நந்தனம், சின்னமலை மற்றும் அண்ணாநகரில் செயல்படும் இச்சேவையை விரிவுபடுத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, இத்திட்டத்தை எந்தெந்த நிலையங்களில் விரிவுபடுத்தலாம் என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

குறிப்பிட்ட நிலையத்தில் இருந்து எவ்வளவு தூரத்திற்கு சேவையை விரிவுபடுத்தலாம், எந்த  இடங்களில் பைக் நிறுத்தங்களை அமைக்கலாம் என்பது குறித்தும் ஆய்வு  செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்ட்ரல், அரசினர் தோட்டம், டி.எம்.எஸ் ஆகிய நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், இச்சேவை செயல்பட்டு வரும் நிலையங்களில் உள்ள இ-பைக்குகளின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

Related Stories: