பெர்த்: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் ஏ பிரிவில், 18 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்தது.வாகா மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீசியது. இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன் குவித்தது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா அதிகபட்சமாக 39 ரன் (17 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். ஜெமிமா ரோட்ரிகியூஸ் 34 ரன் (37 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), தீப்தி 11, ரிச்சா 14 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.வேதா கிருஷ்ணமூர்த்தி 20 ரன் (11 பந்து, 4 பவுண்டரி), ஷிகா பாண்டே 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச பந்துவீச்சில் சல்மா, பன்னா கோஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 20 ஓவரில் 143 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது.