லண்டன்: இங்கிலாந்தில் இனரீதியான தாக்குதலில் இருந்து சீன நண்பரை காப்பாற்ற முயன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டார். இங்கிலாந்தில் பயிற்சி வழக்கறிஞராக இருப்பவர் மீரா சோலன்கா(29). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், தனது நண்பரான சீனாவை சேர்ந்த மேண்டி ஹாங்(28) என்பவருடன் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுவதற்காக சென்றுள்ளார். சோலிஹல் நகரில் உள்ள விடுதி ஒன்றில் மேண்டி மற்றும் மேலும் சில நண்பர்களுடன் மீரா பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அப்போது அங்கே இருந்த ஆசியாவை சேர்ந்த ஒருவர், பல்வேறு இனத்தை சேர்ந்த நண்பர்களுடன் இந்தியரான மீரா இருப்பதை கண்டு ஆத்திரமடைந்துள்ளார்.
திடீரென அவர் அங்கிருந்த மேண்டியை கடுமையாக விமர்சித்துள்ளார். கொரோனா வைரசை சுட்டிகாட்டி இனரீதியாக அவரை திட்டியதாக தெரிகிறது. இதனை தட்டி கேட்ட மீராவை அடையாளம் தெரியாத அந்த நபர் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் மீரா சுயநினைவை இழந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 9ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து வெஸ்ட் மிட்லேன்ட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.