கணவருடன் ஏற்பட்ட தகராறால் பஸ் ஏறிச்சென்ற மனைவி ‘நான் வராம பொண்டாட்டிய மட்டும் எப்படி ஏத்திட்டுப்போவ?’ : மினி பஸ் டிரைவரை உதைத்தவர் கைது

சங்கரன்கோவில்: கணவருடன் ஏற்பட்ட தகராறால் மனைவி மினி பஸ்சில் ஏறிச் சென்றார். அந்த பஸ் டிரைவரை ‘நான் வராமல் பொண்டாட்டிய மட்டும் எப்படி ஏத்திட்டுப்போவே?’ என்று கூறி தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். சங்கரன்கோவில் அருகே உள்ள புதுக்கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாத்துரை (39). மினி பஸ் டிரைவர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (30). கூலி தொழிலாளி. இவர் தனது மனைவியுடன் சங்கரன்கோவில் அருகே உள்ள பட்டாடைகட்டி கிராமத்திற்கு சிவராத்திரியை முன்னிட்டு சாமி கும்பிட வந்துள்ளார். திடீரென இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

கணவனுடன் கோபித்துக்கொண்டு அவரது மனைவி மட்டும் அந்த வழியாக அண்ணாத்துரை ஓட்டி வந்த மினிபஸ்சில் ஏறி சங்கரன்கோவில் வந்துள்ளார். பாலமுருகன் பின்னால் வந்த வேறு ஒரு பஸ்சில் ஏறி சங்கரன்கோவில் கிளம்பியுள்ளார். வென்றிலிங்காபுரம் கிராமத்தில் அண்ணாத்துரை ஓட்டி வந்த பஸ் நின்றிருந்தது. இதை கவனித்த பாலமுருகன் பஸ்சிலிருந்து இறங்கி சென்று, நான் வராம எப்படி என் ெபாண்டாட்டிய மட்டும் ஏத்திட்டுப்போவ? என்று கேட்டு அண்ணாத்துரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். புகாரின்படி சின்னகோவிலான்குளம் போலீசார் வழக்குபதிந்து பாலமுருகனை கைது செய்தனர்.

Related Stories: