மதுரை சிறை வளாகத்தில் கைதிகளால் நடத்தப்படும் ‘மட்டன் ஸ்டால்’: சுத்தம், சுகாதாரத்திற்கு முதலிடம்

மதுரை: மதுரை சிறையில் கைதிகளால் பல்வேறு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது ‘மட்டன் ஸ்டால்’ திறக்கப்பட்டுள்ளது. மதுரை மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.  கைதிகளுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. பூச்செடிகள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. செங்கல், ஓடு, உணவு, பேக்கரி பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. கைதிகளைக் கொண்டு தயாராகும் பொருட்களை விற்பனை செய்ய  சிறையை ஒட்டிய பகுதியில் ‘ஜெயில் பஜார்’ பெயரில் கடை திறக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துடன், குறைந்த விலையில் கிடைப்பதால் கடைக்கு மக்கள் வருகை அதிகரித்துள்ளது. ஏற்கனவே சிறை வளாக ஞானஒளிவுபுரம் ரோட்டில் துணி அயர்ன் செய்து தரும் கடை கைதிகளால் நடத்தப்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே, தற்போது புதிய ‘மட்டன் ஸ்டால்’ திறக்கப்பட்டுள்ளது. நகரில் கிலோ ரூ.800 வரை வெள்ளாட்டு இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கைதிகளே வளர்த்து வரும் வெள்ளாடு கொண்டு வரப்பட்டு, கிலோ ரூ.700க்கு ஆட்டிறைச்சி விற்கப்படுகிறது.

இதுகுறித்து சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘15 கைதிகளைக் கொண்டு இந்த இறைச்சி கடை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு கிலோ ஆட்டிறைச்சி ரூ.700க்கும், 4 கால்கள் ரூ.200க்கும், தலை ரூ.200க்கும் விற்கப்படுகிறது. முதல்கட்டமாக வாரத்தில் சனி, ஞாயிறு இரு நாட்களுக்கு விற்பனை நடக்கிறது. அடுத்தடுத்து இந்த நாட்கள் அதிகரிக்கப்படும். சிவகங்கையில் உள்ள திறந்தவெளி சிறையில் வெள்ளாடுகள் வளர்ப்பில் கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்கிருந்து லாரிகளில் வெள்ளாடுகள் மதுரை கொண்டு வரப்படுகின்றன. கால்நடை டாக்டர்களின் பரிசோதனைக்குப்பிறகு, வெட்டி விற்பனை நடக்கிறது. இந்த இரு நாட்களிலும் குறைந்தது 100 கிலோவிற்கு மேல் விற்பனை நடக்கிறது’’ என்றார்.

Related Stories: