மதுரை: மதுரை சிறையில் கைதிகளால் பல்வேறு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது ‘மட்டன் ஸ்டால்’ திறக்கப்பட்டுள்ளது. மதுரை மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. பூச்செடிகள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. செங்கல், ஓடு, உணவு, பேக்கரி பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. கைதிகளைக் கொண்டு தயாராகும் பொருட்களை விற்பனை செய்ய சிறையை ஒட்டிய பகுதியில் ‘ஜெயில் பஜார்’ பெயரில் கடை திறக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துடன், குறைந்த விலையில் கிடைப்பதால் கடைக்கு மக்கள் வருகை அதிகரித்துள்ளது. ஏற்கனவே சிறை வளாக ஞானஒளிவுபுரம் ரோட்டில் துணி அயர்ன் செய்து தரும் கடை கைதிகளால் நடத்தப்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே, தற்போது புதிய ‘மட்டன் ஸ்டால்’ திறக்கப்பட்டுள்ளது. நகரில் கிலோ ரூ.800 வரை வெள்ளாட்டு இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கைதிகளே வளர்த்து வரும் வெள்ளாடு கொண்டு வரப்பட்டு, கிலோ ரூ.700க்கு ஆட்டிறைச்சி விற்கப்படுகிறது.