மலேசியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் டாக்டர் மகாதீர் மொஹமத்

கோலாலம்பூர்: மலேசியாவின் பிரதமர் டாக்டர் மகாதீர் மொஹமத் இன்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்து பிரதமர் பதவியில் இருந்து விலகினார். உலகின் மிகவும் வயதான பிரதமர் என்று சிறப்பை பெற்றவர்தான் 94 வயது நிரம்பிய மகாதீர் மொஹமத் ஆவார். 2003-ல் அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற மகாதீர் 2018-ல் மீண்டும் மலேசியப் பிரதமானார். கடந்த 2018ல் இவர் மலேசியாவின் பிரதமர் ஆன போது உலகமே இவரை கொண்டாடியது. மலேசியாவிற்கு புதிய முகம் கொடுத்தவர் இவர்தான். இவர் மீண்டும் பிரதமராக வந்து அதிரடி அரசியலில் ஈடுபடுவது சந்தோசம் அளிக்கிறது என்று அந்நாட்டு மக்கள் கூறினார்கள்.

இதனால் அந்நாட்டு அரசியல் குழப்பங்களும் சரியானது. அந்நாட்டு ஆளும் கட்சியின் ஊழல்களுக்கு இடையில்தான் தேர்தலை சந்தித்து மகாதீர் மொஹமத் வெற்றிபெற்றார். ஆனால் மகாதீர் மொஹமத் தனியாக வெற்றிபெறவில்லை. மகாதீர் மொஹமத் மலேசியன் யுனைட்டட் இண்டிஜினியஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவர் அந்நாட்டு இன்னொரு அரசியல் தலைவரான அன்வர் இப்ராஹிம் கட்சியான பீப்பிள் ஜஸ்டிஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார்.  ஆனால் இந்த கூட்டணிக்குள் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் சண்டை நிலவி வந்தது.

இதனால் மகாதீர் மொஹமத் அன்வரை விமர்சிக்க தொடங்கினார். அன்வரும், மகாதீர் மொஹமத்தை விமர்சித்து வந்தார். இந்த நிலையில் மகாதீர் மொஹமத் கட்சியை சேர்ந்த சிலர் முன்னாள் ஆளும் கட்சி கே கூட்டணியின் உறுப்பினர்களுடன் நேற்று ஆலோசனை செய்தனர். அன்வர் கட்சியை சேர்ந்த சிலரும் முன்னாள் ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்தனர்.  இந்த செய்தி நேற்று இணையம் முழுக்க வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அன்வர் இப்ராஹிம், மகாதீர் மொஹமத் என்னை ஏமாற்றிவிட்டார்.

அவர் எங்களுக்கு கொடுத்த சத்தியத்தை மீறிவிட்டார். ஆட்சிக்கு வந்து சில வருடங்களில் என்னிடம் பொறுப்பை கொடுப்பேன் என்று கூறினார். ஆனால் மகாதீர் மொஹமத் அதை செய்யவில்லை. என் கட்சியை சேர்ந்தவர்களும் என்னை ஏமாற்றிவிட்டனர் என்று அன்வர் புகார் அளித்தார்.  இது மலேசியாவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்போது திடீர் திருப்பமாக மகாதீர் மொஹமத் பதவி விலகி இருக்கிறார். மகாதீர் மொஹமத் சத்தியத்தை மீறிவிட்டார் என்று அன்வர் புகார் கொடுத்த சில மணி நேரங்களில் மகாதீர் மொஹமத் பதவி விலகி இருக்கிறார். இதனால் அங்கு அன்வர் பிரதமர் ஆவாரா அல்லது அங்கு மீண்டும் தேர்தல் நடக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. மலேசிய அரசியலில் இதனால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: