முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி பள்ளிகள், அரசு அலுவலகங்களில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்படுகிறது. பெண் குழந்தைகளுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய சேவையை நினைவுகூரும் வகையில் அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதியை ஆண்டுதோறும் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதைத் தொடா்ந்து இன்றைய தினம் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகள் பாதுகாப்பினை வலியுறுத்தும் வகையில், மனித சங்கிலி, உறுதிமொழி ஏற்பு, பேரணி, கருத்தரங்கம், தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அனைத்து அரசு அலுவலகங்களிலும், அனைத்து பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்கப்படுகிறது. முன்னதாக, ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று, அனைத்து அரசுப் பள்ளிகள் அற்றும் அரசு அலுவலகங்களில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு சுற்றிறிக்கை வெளியிட்டிருந்தது.

அதில், இந்திய குடிமகனாகிய நான் சாதி, மதம், இனம், மொழி, சமூக, பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்துவேன். எனது செயல்பாடுகளால் எந்தவொரு குழந்தையையும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்காத வகையில் கவனமுடன் நடந்து கொள்வேன். எனது கவனத்துக்கு வரும் குழந்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் எந்தவொரு பாதிப்பையும் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவேன். மேலும் இதனை உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன். இன்றைய குழந்தைகள் நாளைய தலைவா்கள் என உணா்ந்து அவா்களின் வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு என்னால் இயன்ற பங்களிப்பை அளிப்பேன்.

குழந்தைத் திருமணத்தை நிறுத்த... குழந்தைத் திருமணம் பற்றி தெரிய வந்தால் அதைத் தடுத்து நிறுத்துவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவேன். நான், குழந்தைத் தொழிலாளா்கள் இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதுணையாக இருப்பேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கையில் வழங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகளை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன், என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: