×

சிஏஏ போராட்டத்துக்கு எதிர்ப்பு இந்து அமைப்பின் மாநில நிர்வாகி தீக்குளிக்க முயற்சி: புளியந்தோப்பில் பரபரப்பு

பெரம்பூர்: சிஏஏ போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பின் மாநில நிர்வாகி தீக்குளிக்க முயன்றதால் புளியந்தோப்பு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை புளியந்தோப்பு டிக்காஸ்டர் சாலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முஸ்லிம்கள் தொடர் போராட்டத்தை தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மக்கள்  முன்னணியின் மாநில அமைப்பாளர் நாராயணன் நேற்று மதியம் 2 மணி அளவில் புளியந்தோப்பு நெடுஞ்சாலை காந்தி சிலை முன்பு தேசிய கொடியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  அப்போது, அவர் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து, தனது தலையில் ஊற்றி தீ வைக்க முயன்றார். அங்கிருந்த புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் புளியந்தோப்பு காவல் நிலையம் அழைத்து சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புளியந்தோப்பில் ஒருபுறம் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதே பகுதியில் இந்து அமைப்பு நிர்வாகி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : State Administrator ,CAA ,organization ,protests , CAA protests, anti-government activities , Hindu organization
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்