வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட நிழலுலக தாதா ரவி பூஜாரி பெங்களூரு அழைத்து வரப்படுகிறார்: கூடுதல் டிஜிபி தலைமையில் போலீசார் பயணம்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த பிரபல நிழல் உலக தாதா ரவி  பூஜாரி, போலீசாரால் தேடப்படும் குற்றவாளி. கர்நாடகா,  மகாராஷ்டிரா மாநில போலீஸ் மற்றும் இன்டர்போல் போலீசாராலும் தேடப்பட்டு வந்த  இவர், கடந்த 2019 ஜன.19ம் தேதி மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனகல்லில் டக்கர் என்ற இடத்தில் வைத்து அந்நாட்டு போலீசாரால் கைது  செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பர்கினா பாசோ நாட்டின் பாஸ்போர்ட்  வைத்திருந்தார் என்றும், தனது பெயரை அந்தோனி பெர்னாண்டஸ் என்றும் மாற்றி  வைத்திருப்பதும் தெரியவந்தது. ஏற்கனவே இன்டர்போல் போலீசாரால் தேடப்படும்  குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் செனகல் போலீசார் ரவி பூஜாரியை  எளிதாக அடையாளம் கண்டு கொண்டனர்.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாடு கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதை அறிந்த  ரவி பூஜாரி அதற்கு தடை கோரி செனகல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.  தற்போது அந்த மனுவை  நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அத்துடன்  ரவி பூஜாரியை நாடு கடத்துவதற்கான முழு அனுமதியையும் வழங்கியுள்ளது. இது  தொடர்பாக இரு நாட்டு போலீசார் இடையே கையெழுத்து ஒப்பந்தமாகிவிட்டதாகவும்  கூறப்படுகிறது.

அதன்படி தற்போது கர்நாடகா தரப்பில் பெங்களூரு  குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி அமர்குமார் பாண்டே தலைமையிலான தனிப்படை  போலீசார் செனகல் சென்றுள்ளனர். மற்றொருபுறம் மும்பை போலீசார் தரப்பில்  தனிப்படை சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இன்று அல்லது  நாளை அவர் பெங்களூரு வருவதற்கான வாய்ப்புள்ளது.

Related Stories: