புதுடெல்லி: ‘சிக்கலான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகள், நாட்டின் அரசியல் சாசனத்தையும், சட்ட கட்டமைப்புகளையும் பலப்படுத்தி வருகிறது,’ என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராட்டியுள்ளார். டெல்லியில் ‘சர்வதேச நீதித்துறை மாநாடு - 2020’ நடைபெற்று வருகிறது. இதை நேற்று முன்தினம் தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, பாலின சமநிலையை காப்பதில் நீதித்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாக புகழ்ந்தார். 2ம் நாளான நேற்று, ‘நீதித்துறையும் மாறிவரும் உலகமும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று பேசியதாவது: பாலின நீதியை காப்பதில் இந்திய நீதித்துறை எப்போதும் போற்றத்தக்க, உன்னதமான குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறது. செயல் திறன் மிக்கதாகவும், முன்னேற்றத்தை உள்ளடக்கியதாகவும் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இதற்கு உதாரணமாக, வேலை செய்யும் இடங்களில் பெண்கள் சந்திக்கும் பாலின தொல்லைகளை தடுப்பதற்காக 20 ஆண்டுகளுக்கு முன் விசாகா வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்தது முதல், இந்திய ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் அதிகார அந்தஸ்து வழங்கும்படி இந்த மாதம் உத்தரவிட்டது வரை, முன்னேற்றமிக்க சமூக மாற்றங்களை உச்ச நீதிமன்றம் முன்நடத்தி செல்கிறது.