×

ரவுடி கொலையில் மேலும் 3 பேர் கைது: பெண் கஞ்சா வியாபாரிக்கு வலை

தண்டையார்பேட்டை,: காசிமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் குப்பன் (எ) சொரி குப்பன் (56). காசிமேட்டை சேர்ந்த பிரபல ரவுடி மாலைக்கண் செல்வத்தின் கூட்டாளியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன், காசிமேடு புதிய மேம்பாலம் அருகே குப்பன் நடந்து சென்றபோது, அங்கு வந்த 4 பேர், குப்பனை சுற்றிவளைத்து கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பினர். இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ராயபுரம் இந்திரா நகரை சேர்ந்த ரவுடி அட்டு ரமேஷ் (47) என்பவரின் மனைவியை குப்பன் தவறான உறவுக்கு அழைத்ததாகவும், இதுபற்றி அறிந்த ரமேஷ் குப்பனை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், ரமேஷின் அக்கா மேனகா (49) காசிமேடு பகுதியில் கஞ்சா, மாவா போன்ற போதை பொருட்கள் விற்று வந்துள்ளார்.

குப்பன் அந்த பகுதி சங்க தலைவராக இருந்ததால், போதை பொருள் விற்ககூடாது என மேனகாவை எச்சரித்துள்ளார். அந்த  பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் ஆத்திரடைந்த ரமேஷின்  கும்பத்தினர் குப்பனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி அட்டு ரேமஷ், தனது மகன்கள் சந்தோஷ் (19), ராகேஷ் (18) மற்றும் மைத்துனர்  சம்பத் (25) ஆகியோருடன் சேர்ந்து குப்பனை வெட்டி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, அட்டு ரமேஷை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சந்தோஷ், ராகேஷ்  மற்றும் சம்பத் ஆகியோரை நேற்று கைது செய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ரமேஷின் அக்கா மேனகாவை தேடி வருகின்றனர்.

Tags : Rowdy ,Cannabis Dealer , Rowdy Murder, 3 People, Arrested, Female Cannabis Dealer, Web
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...