திருவொற்றியூர்,: திருவொற்றியூர் ராதாகிருஷ்ணன் தெருவில் திறந்த நிலையில் உள்ள மின் பெட்டியால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், 7வது வார்டுக்குட்பட்ட ராதாகிருஷ்ணன் தெருவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் என பெரும்பாலானோர் இந்த தெரு வழியாக நடந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த பகுதி வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் வகையில், மின்வாரியம் சார்பில் தெருவோரம் மின் பெட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியின் கதவு உடைந்து பல நாட்களாக திறந்து கிடக்கிறது. இதனால், அவ்வழியே நடந்து செல்லும் மாணவர்கள், சிறுவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.