×

திருவொற்றியூர் ராதாகிருஷ்ணன் தெருவில் திறந்தநிலை மின்பெட்டியால் விபத்து ஏற்படும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்

திருவொற்றியூர்,: திருவொற்றியூர் ராதாகிருஷ்ணன் தெருவில்  திறந்த நிலையில் உள்ள மின் பெட்டியால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், 7வது வார்டுக்குட்பட்ட ராதாகிருஷ்ணன் தெருவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களில்  பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் என பெரும்பாலானோர் இந்த தெரு வழியாக நடந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த பகுதி வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் வகையில், மின்வாரியம் சார்பில் தெருவோரம் மின் பெட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியின் கதவு உடைந்து பல நாட்களாக திறந்து கிடக்கிறது. இதனால், அவ்வழியே நடந்து செல்லும் மாணவர்கள், சிறுவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

மழை காலங்களில் இந்த மின் பெட்டியில் உள்ள வயர்கள் மீது தண்ணீர் படுவதால், மின் கசிவு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், இந்த மின்பெட்டி அருகில் டாஸ்மாக் கடை மற்றும் பார் உள்ளதால், போதையில் வரும் குடிமகன்கள் தடுமாறி இந்த மின் பெட்டியில் உரசி உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, திறந்து கிடக்கும் மின் பெட்டிக்கு கதவு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சாத்தாங்காடு மின்வாரிய  அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உயிர் இழப்பு ஏற்படும் முன்பு, இந்த மின்பெட்டிக்கு கதவு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : accident ,Thiruvottiyur Radhakrishnan Street Thiruvottiyur , Thiruvottiyur, open-air minpetti, accident, danger
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...