வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு

அண்ணாநகர்,: வில்லிவாக்கம், கிழக்கு மாட வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (25). நொளம்பூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். நொளம்பூர் பிரதான சாலையில் வந்தபோது, அங்கிருந்த கடையில் நிறுத்தி டீ குடித்துக்கொண்டு, செல்போனில் பேசியபடி இருந்தார். அப்போது, அங்கு வந்த 2 மர்ம நபர்கள், மணிகண்டனை தாக்கி, அவரது விலை மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில், நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

*செல்போன் திருடியவருக்கு தர்ம அடி

அண்ணாநகர்,: கோயம்பேடு பேருந்து நிலைய நடைபாதையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒருவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் சட்டை பையில் இருந்த செல்போன் மற்றும் பணத்தை ஒருவர் திருடிக்கொண்டு ஓடினார். இதை பார்த்த சக பயணிகள் அவரை விரட்டி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து கோயம்பேடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜீவ்பிரசாத் (45) என்பதும், இவர் சென்னைக்கு வந்து வேலை எதுவும் கிடைக்காததால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செல்போன், நகை திருடி வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, அவரிடம் இருந்து பணம், செல்போனை பறிமுதல் செய்தனர்.

Related Stories: