காதல் வலையில் வீழ்த்தி பெண் போலீசை கர்ப்பமாக்கிய ரயில்வே போலீஸ்காரர் கைது

விழுப்புரம்: பெண் போலீசை காதல்வலையில் வீழ்த்தி கர்ப்பமாக்கி ஏமாற்றிய புகாரில் ரயில்வே போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். அவரை துறை ரீதியாக எஸ்.பி.சஸ்பெண்ட் செய்துள்ளார். விழுப்புரம் அருகே கருங்காலிப்பட்டைச் சேர்ந்தவர் சரத்குமார் (28). விழுப்புரம் ரயில்வே இருப்புப்பாதை காவல்நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர் மீது, காணையைச் சேர்ந்த ராஜலட்சுமி (26) என்பவர், தன்னை காதலித்து  ஏமாற்றியதாக விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார். அந்தபுகாரின் பேரில், அவருடன் வேலை செய்யும் பெண் போலீஸ் பிரியங்கா உள்ளிட்ட இருவர் மீது அனைத்து மகளிர்  காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்மீது புகார் அளித்த ராஜலட்சுமியை, சரத்குமார் திருமணம் செய்துகொண்டார். அதே சமயம், தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக பிரியங்கா, சரத்குமார் மீது வேறொரு புகாரை அளித்தார்.  

அந்த புகாரில், ‘‘நாங்கள் இருவரும் ஆயுதப்படையில் பணியாற்றியபோதே, பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தோம். தன்னிடம் ஆசை வார்த்தைகளை கூறி பலமுறை தவறாக நடந்து கொண்டார். இதில் நான் கர்ப்பமடைந்தேன். ஆனால்,  சரத்குமார் வற்புறுத்தலின்பேரில் 4 முறை கருக்கலைப்பு செய்து கொண்டேன். இதனால், 7 மாதம் கர்ப்பிணியாக உள்ளேன். இப்போது, என்னை ஏமாற்றிவிட்டு ராஜலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையறிந்து அவரது  வீட்டிற்கு சென்று தட்டிகேட்டேன். அப்போது சரத்குமார், அவரது உறவினர் நகர காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றும் கீதா ஆகியோர் சேர்ந்து என்னை திட்டி, செருப்பு காலால் எட்டி உதைத்து வெளியேற்றி விட்டனர். எனவே, அவர்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று கூறியிருந்தார்.  இதையடுத்து, சரத்குமார், கீதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சரத்குமாரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும், சரத்குமாரை சஸ்பெண்ட் செய்து திருச்சி ரயில்வே எஸ்.பி. செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: