கோவை: கோவையில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை கணபதி அருகேயுள்ள மணியகாரம்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை சரவணம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் நடமாடிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பேக்கை சோதனையிட்டனர். அதில், 60 ஆயிரம் ரூபாய் இருந்தது. தீவிரமாக ஆராய்ந்ததில் கள்ள ரூபாய் நோட்டு என தெரியவந்தது. இதன்பின், கிதர்முகம்மது (66), மகேந்திரன் (39), சூர்யகுமார் (30) ஆகியோரை கைது செய்தனர். சூர்யகுமார் கணுவாய் பகுதியில் இ சேவை மையம் நடத்தி வருகிறார். இவர் பல்வேறு தேவைக்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். கடனால் தவித்து வந்துள்ளார். தனக்கு பழக்கமான கிதர் முகம்மதுவிடம் கடன் பிரச்னை தீர ஆலோசனை கேட்டுள்ளார். கிதர்முகம்மது கள்ள ரூபாய் நோட்டு தயாரிப்பதில் கில்லாடி. கள்ள ரூபாய் நோட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று வௌியே வந்தவர். இவர் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்தால் பிரச்னை தீரும். ஆனால் கவனமாக செயல்படவேண்டும் என சூர்யகுமாருக்கு ஆலோசனை கூறியுள்ளார்.