தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனுக்கும்-புட்டிரெட்டிப்பட்டிக்கும் இடையே தண்டவாள பகுதியில் நேற்று முன்தினம் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. மார்பில் கத்தியால் குத்திய காயத்துடன், கை, கால்கள் துண்டான நிலையில் சடலம் கிடந்ததுடன், தண்டவாளத்தில் இருந்து சுமார் பத்து மீட்டர் இடைவெளியில் ரத்தம் உறைந்த நிலையில் இருந்தது. தண்டவாளத்தில் மஞ்சள் நிற வேட்டி, இரண்டு கொக்கிகளுக்கிடையே கட்டப்பட்டிருந்தது. ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்தவர் மாரண்டஅள்ளி அடுத்த உலகனஅள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயி பழனி(45) என்பது தெரியவந்தது. இவருக்கு ராதா(36) என்ற மனைவியும், ஒரு மகன், மகளும் உள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் இரவு நேரத்தில், அதே பகுதியைச் சேர்ந்த தனது கள்ளக்காதலன் ஆறுமுகத்துடன், தோட்டத்தில் ராதா தனிமையில் இருந்தார். அப்போது, காட்டுப்பன்றி என நினைத்து அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம், சின்னசாமி ஆகியோர் துப்பாக்கியால் சுட்டதில், ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பலியானார். ராதா குண்டடிப்பட்டு மயங்கி விழுந்தார். பின்னர், ராதா மற்றும் சின்னசாமி, சண்முகம் ஆகியோர் சேர்ந்து, ஆறுமுகத்தின் சடலத்தை அருகே இருந்த தண்டவாளத்தில் வீசி விட்டு சென்றனர்.