சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள போடிநாயக்கன்பட்டியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. அதன்பின்பு பல்வேறு காரணங்களால் அப்பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அனுமதி அளிக்க வில்லை. இதனையடுத்து இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விழாக்குழுவினர் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற மாவட்ட நிர்வாகம் பிப்ரவரி 23ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியது. இதன்படி இன்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, கலெக்டர் மெகராஜ், எம்எல்ஏ சந்திரசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்று கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தனர். இதில் திருச்சி, மதுரை, தம்மம்பட்டி, அலங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 400 ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்றுள்ளன. இதேபோல் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு, வாடிவாசல் வழியாக சீறிபாய்ந்து வரும் காளைகளை அடக்கி வருகின்றனர். போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.