சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே இரு மாவட்ட எல்லையில் உள்ள காவல் சோதனைச்சாவடி பூட்டிக்கிடக்கும் அவல நிலை உள்ளது. போலீசார் பணியில் இல்லாத நிலையில் போலீசாருக்கு பதிலாக மேசை மீது காவலுக்காக தொப்பி வைக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் ஈரோடு மற்றும் கோவை மாவட்ட எல்லையில் உள்ள பெரிய கள்ளிப்பட்டியில் காவல்துறை சோதனைச்சாவடி உள்ளது. இரு மாவட்ட எல்லை என்பதால், இந்த சோதனைச்சாவடியில் பவானிசாகர் போலீசார் 24 மணி நேரமும் பணியிலிருந்து வாகனங்களை தணிக்கை செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக இந்த சோதனைச்சாவடிக்கு போலீசார் பணியில் இருப்பதில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக காவல் சோதனைச்சாவடி பூட்டியே கிடக்கிறது.