கோவை: அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவை மாநகரில் ஏற்கனவே 50 புதிய சிவப்பு நிற சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதலாக மேலும் 60 பேருந்துகள் வந்துள்ளது. அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டத்தில் ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இவைகளில் 1500க்கும் மேற்பட்ட மப்சல் பேருந்துகளும், 715 டவுன் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இவைகளில் காலாவதியான பேருந்துகள் பெரும்பாலானவை மாற்றப்பட்டு கடந்த 2 ஆண்டுகளில் பி.எஸ்4 தரத்துடன் 800க்கும் அதிகமான புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவை மாநகரில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் 50 புதிய சிவப்பு நிற டீலக்ஸ் பேருந்துகள் இயக்கப்பட்டன. இப்பேருந்துகளில் பயணிகளின் வரவேற்பு அதிகமாக உள்ளதால் கூடுதல் ரெட் சிவப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டன.
அதன் படி புதிய பேருந்துகள் கரூரில் வடிவமைக்கப்பட்டு கோவைக்கு வந்துள்ளது. இப்பேருந்தில் தானியங்கி கதவு, அவசர கால வழி, சென்சார், தீயணைப்பு கருவி, 3 பக்க டிஜிட்டல் எல்.இ.டி வழித்தட பலகை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டது. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோவைக்கு வர உள்ள ரெட் பஸ்கள் முழுவதும் டவுன் சேவைகளுக்கு இயக்கப்பட உள்ளது. தற்போது வந்துள்ள பஸ்கள் அவைகளுக்கு ஒதுக்கப்பட்ட கிளைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இவைகள் மார்ச் மாதத்திற்குள் இயங்க துவங்கும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 3, 3டி, 4, 5சி, 11டி, 11ஈ, எஸ் 9ஏ, 10சி, எஸ் 11ஏ, 14டி, 14ஈ, 20ஏ, 21ஏ, 95, 41டி, 45சி, 96, 39, 39பி, 63பி, 70ஏ, 70பி, 111, 90ஏ, 111ஏ, 95, 59சி, 70 45எச், 140 ஆகிய வழித்தட பேருந்துகள் கோவைக்கு வந்துள்ளது. முழுவதும் வந்த பின்னர் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும்’’ என்றனர்.