* விவசாயிகள் வேதனை
* வேளாண்மை துறை அலட்சியம்நாகை: நாகை மாவட்டத்தில் மண்ணின் தரம் அறியாமல் வேளாண்மை துறை கொடுத்த விதை ரகத்தால் 500 ஏக்கர் பரப்பளவில் முளைக்காமல் கடலை செடிகள் வீணாகியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நாகை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக பரவலாக நிலக்கடலை பயிரிடப்படுகிறது. 90 நாட்களில் பயன் தரக்கூடிய பணப்பயிர் என்பதாலும், கால்நடைகளுக்கு நிலக்கடலை செடி சிறந்த தீவனமாக இருப்பதாலும் நிலக்கடலையை பயிர் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். கஜா புயல் சீற்றத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான நாகை மாவட்ட பகுதிகளில் உள்ள கடலோர கிராமங்களில் கடல் நீர் உள்புகுந்ததால் மண்ணின் தரம் மாறுபட்டுள்ளது. இதனால் புயலுக்கு பின்னர் கடலோர கிராமங்களில் விவசாய பணிகள் சரியாக நடைபெறவில்லை. கடல் நீர் உள்புகுந்ததால் நிலத்தில் நச்சுத் தன்மையும் அதிகமாகியுள்ளது. இதனால் சி7 என்ற ரகம் நிலக்கடலை முளைக்காமல் போய் உள்ளது. நிலக்கடலை பயிரிட்டு 60 நாட்கள் ஆன நிலையிலும் உயரமாக செடிகள் வளர்ந்துள்ளது. அறுவடை காலத்தில் செடிகளை பிடிங்கி பார்த்தால் அடிப்பகுதியில் கடலை இல்லாமல் வெறும் செடியாக இருப்பதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.