போலீஸ் ஸ்டேசன் லாக்கப்பில் 5 நாளாக கம்பி எண்ணும் 6 பந்தய சேவல்கள்

* இடைவிடாது கூவுவதால் போலீசார் அவதி

* அரிசி, தண்ணீர் என தீவனம் வைத்து கவனிப்பு

நாமக்கல்: நாமக்கல் அருகே சூதாட்டத்தில் ஈடுபடுத்திய 6 பந்தய சேவல்களை பறிமுதல் செய்த போலீசார் லாக்கப்பில் அடைத்து பராமரித்து வருகின்றனர். கால்நடைத்துறை மருத்துவ சான்றிதழ் பெறுவதற்காக, காத்திருக்கும் இந்த சேவல்கள், இடைவிடாது கூவுவதால் போலீசார் உச்சகட்ட விரக்தியில் உள்ளனர். முட்டை மாவட்டமான நாமக்கல் நகர போலீஸ் ஸ்டேஷன் நேற்று எப்போதும்போல பரபரப்பாக இருந்தது. காவலர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். திடீரென போலீஸ் ஸ்டேஷன் உள்ளிருந்து அடுத்தடுத்து சேவல் கூவுகிற சத்தம் கேட்டது. தொடர்ந்து சத்தம் வந்ததால் என்ன ஏதென்று விசாரித்த போது பெரிய கதையே தெரிய வந்தது. அது என்னன்னு பார்ப்போமா...? நாமக்கல் அருகே கூலிப்பட்டி வனப்பகுதியில், கடந்த 19ம் தேதி அனுமதியின்றி சிலர் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற நாமக்கல் போலீசார் 5 பேரை, கைது செய்தனர். சேவல் சன்டைக்கு பயன்படுத்திய 6 பந்தய சேவல்கள், 9 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டனர்.

ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட 6 பந்தய சேவல்களை என்ன செய்வது என தெரியாமல், காவல்நிலையத்தில் உள்ள லாக்கப்பில், கடந்த 5 நாட்களாக அடைத்து வைத்து போலீசார் பராமரித்து வருகிறார்கள். ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளதால், இடைவிடாது சேவல்கள் கூவிக்கொண்டே இருக்கிறது. திடீர் திடீரென ஒன்றுக்கொன்று சண்டையிடுகிறது. சேவல்களின் கூவல் சப்தம் அங்கு வேலை செய்யும் போலீசார் மற்றும் வந்து செல்லும் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறாக இருந்து வருகிறது. ஒரு குற்ற வழக்கில் சம்பவ இடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தையும் நீதிமன்றத்தில்தான் ஒப்படைக்க வேண்டும். அதே போல சேவல்களையும் நீதிமன்றத்தில் காட்ட வேண்டும். இதற்கு கால்நடை பராமரிப்புத்துறையினரை அணுகி சேவல்களின் உடல் நலனை பரிசோதிக்க வேண்டும். பின்னர் அவர்கள் சான்றிதழ் அளித்த பிறகே நீதிமன்றத்துக்கு சேவல்களை கொண்டு செல்லமுடியும் என போலீசார் தெரிவிக்கிறார்கள்.

பல்வேறு பணிகளுக்கு மத்தியில், இந்த வேலையை செய்ய முடியாமல் நாமக்கல் போலீசார் தவிக்கிறார்கள். இதனால் வேறு வழியின்றி தினமும் 6 சேவல்களுக்கும் அரிசி, தண்ணீர் என தேவைக்கேற்ப உணவு பொருட்களை கொடுத்து கவனித்து வருகிறார்கள். காவல் நிலையத்தில் பணியாற்றும் பல போலீசார், தங்களின் 25 வருட அனுபவதில் இப்படி ஒரு வழக்கை இப்போது தான் முதன் முதலாக பார்க்கிறோம். உயர் அதிகாரிகள் என்ன முடிவு செய்கிறார்களோ, அதற்கு பிறகு  தான் சேவல்கள் லாக்கப்பில் இருந்து வெளியே வரமுடியும் என்கிறார்கள்.

Related Stories: