×

சேலத்தில் தொடர்ச்சியாக 3 பேரை கொன்ற சைக்கோ வாலிபர் கைது: கஞ்சா போதையில் திசைமாறியதாக வாக்குமூலம்

சேலம்:  சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நிழற்கூடம் பகுதியில் கடந்த 1ம் தேதி நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை சேர்ந்த பெரியசாமி(65) என்பவரும், 2ம் தேதி திருவாக்கவுண்டனூர் பைபாஸில் வடமாநிலத்தை சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவரும், 3ம் தேதி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே வணிக வளாகத்தில் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த பழக்கடை வியாபாரியின் தந்தை அங்கமுத்து (60) என்பவரும் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இக்கொலை நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது 3 கொலைகளையும் ஒரே நபர் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தூங்கிக்கொண்டிருந்தவர்களின் தலையில் கல்லை போட்டு பணத்தை திருடும் காட்சியும் இடம் பெற்றிருந்தது.

தொடர்ந்து 3 இரவுகள் நடந்த படுகொலையால் மாநகர் முழுவதும் பீதி ஏற்பட்டது. இதையடுத்து சைக்கோ கொலையாளியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சந்தேகத்திற்கிடமான வாலிபர் ஒருவர் போலீசார் பிடியில் சிக்கினார். விசாரணையில் 3 கொலைகளையும் செய்ததை ஒப்புக்கொண்டார். வீடியோ காட்சியில் இருந்தவரும் இந்த வாலிபரும் ஒருவர்தானா என ஒப்பிட்டு பார்ப்பதற்காக சென்னை, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வீடியோ மற்றும் புகைப்படத்தை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அதில் பிடிபட்ட வாலிபர் தான் கொலையாளி என்று உறுதியானது. இதையடுத்து நேற்று காலை அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே சித்தேரியூர் என்ற கிராமத்தை சேர்ந்த மார்க்கண்டன்-நாகம்மாள் ஆகியோரின் மகன் ஆண்டிசாமி (19).

அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: எனது பெற்றோர் கூலி வேலை செய்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்டார். இதையடுத்து எனது தாய் தான் என்னையும் தம்பி ராமரையும் கூலி வேலைக்கு சென்று காப்பாற்றினார். நான் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 428 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றேன். மேற்கொண்டு படிக்க வசதி இல்லை. இதனால், படிப்பை நிறுத்திவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்ற தொடங்கினேன். அப்போது கஞ்சா பழக்கம் ஏற்பட்டது. கஞ்சா போதைக்கு அடிமையானதால் தாயை தாக்கி பணத்தை பறித்துச்செல்வேன். வீட்டை அடித்து நொறுக்கியுள்ளேன். வீட்டுக்கு தீ வைத்து எரித்து விட்டேன். இதை தட்டிக்கேட்ட பக்கத்து வீட்டுக்காரரிடமும் தகராறில் ஈடுபட்டேன். தொடர்ந்து ஊர் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்த நான் அவர்களால் ஊரை விட்டு விரட்டப்பட்டேன்.

இதற்கிடையில் என்னை ஏர்வாடி தர்காவிற்கு சிகிச்சைக்காக எனது தாய் நாகம்மாள் அழைத்து சென்றார். அங்கிருந்து தப்பினேன். ஊர் ஊராக பிச்சை எடுப்பதும் அதில் கிடைக்கும் பணத்தில் கஞ்சா அடிப்பதுமாக வாழ்ந்து வந்தேன். இந்நிலையில் வேளாங்கண்ணிக்கு சென்றிருந்தபோது கஞ்சா குடிக்க பணம் இல்லாததால் பிச்சைக்காரர் ஒருவரின் தலையில் கல்லை போட்டு கொன்றேன். அவரிடம் இருந்த பணத்தை எடுத்து கஞ்சா அடித்து ஊர் சுற்றினேன். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சேலம் வந்தேன். இங்கு இரவு நேரத்தில் பிச்சைக்காரர்களிடம் பணம் திருடினேன். ஒரு சில நேரத்தில் அவர்கள் என்னை விரட்டி விரட்டி அடித்தனர். அதேநேரத்தில் கஞ்சா அடிக்காமல் என்னால் இருக்க முடியாது என்பதால் அவர்கள் தலையில் கல்லைப்போட்டு கொன்றுவிட்டு பணம், கஞ்சாவை எடுத்தேன். இப்படி 3 இடங்களிலும் கொலைகளை நான் தான் செய்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கைதான ஆண்டிசாமி, போலீசாரிடம் தூய தமிழிலேயே பேசினார். வறுமை மற்றும் கஞ்சாவுக்கு அடிமையானதால் அவர் தவறான வழியில் சென்றுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை   கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று மாலை சிறையில் அடைத்தனர்.

Tags : teenager ,Salem , Salem, Psycho plaintiff, arrested
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...