‘நீங்கள் யார்’ என கேட்டு ரஜினியை கிண்டலடித்த வாலிபர்: பைக் திருட்டு வழக்கில் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரஜினியை ‘நீங்கள் யார்’ என கிண்டலடித்த வாலிபர், நண்பர்களுடன் பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சாம்குமார் (24). இவர் தனது பைக்கை  வீட்டு முன்பு நிறுத்தியிருந்தார். மறுநாள் வந்து பார்த்த போது பைக் காணாமல் போனது. இதுகுறித்து அவர் வடபாகம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பண்டாரம்பட்டியை சேர்ந்த சந்தோஷ் (23), கால்டுவெல் காலனியை சேர்ந்த மணி(23), ஆசிரியர் காலனி சரவணன் (22) ஆகியோர் பைக்கை திருடியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து பைக்கை மீட்ட போலீசார், 3 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

கைதான வாலிபர் சந்தோஷ், தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸ் தடியடியில் காயமடைந்தவர். அப்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற  வந்த நடிகர் ரஜினிகாந்த், சந்தோஷிடம் நலம் விசாரித்தார். அப்போது வாலிபர் சந்தோஷ், ரஜினியிடம் நீங்கள் யார்? என கிண்டலாக கேட்டது குறிப்பிடத்தக்கது. இது சமூகவலைதளங்களில் வைரலானது. தற்போது அவர் பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தகவலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: