×

படப்பிடிப்பில் 3 பேர் பலியான சம்பவம் நேர்மையான, விரிவான விசாரணை வேண்டும்: போலீஸ் கமிஷனரிடம் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை

சென்னை: படப்பிடிப்பில் 3 பேர் பலியான சம்பவத்தில் நேர்மையான, விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று சினிமா பெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இந்தியன் 2  திரைப்படம் கமல் நடிக்க, இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார்.  இதில் காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது. கடந்த 19ம் தேதி பாரம் தாங்காமல் மின் விளக்குகள் பொறுத்தப்பட்டிருந்த கிரேன் எதிர்பாராத விதமாக அறுந்து கீழே விழுந்தது.

அப்போது அங்கு பணியில் இருந்த உதவி இயக்குநர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படக் குழுவைச் சேர்ந்த மான்சிங், வாசு, ரம்ஜான், அருண்பிரசாத், குமார், கலைசித்ரா, குணபாலன், திருநாவுக்கரசு, முருகதாஸ் ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், நடிகை காஜல் மற்றும் தயாரிப்பு நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜனை நசரத்பேட்டை போலீசார் சென்னையில் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து நசரத்பேட்டை போலீசார் வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தியிடம் ஒப்படைத்தனர்.

அதை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தங்களுடைய விசாரணையை நாளை முதல் தொடங்க உள்ளனர். இந்நிலையில் சினிமா பெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று வேப்பேரியில் உள்ள போலீசார் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை நேரில் சந்தித்து படப்பிடிப்பின் விபத்து நடந்தது தொடர்பாகவும், விபத்தில் 3 பேர் பலியான விவகாரத்தில் நேர்மையான மற்றும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Tags : RK Selvamani ,police commissioner , Incident honesty, investigation, RK Selvamani
× RELATED கஞ்சா விற்ற 40 பேர் கைது