தாயிடம் ஆபாசமாக பேசியதால் ஆத்திரம் பீர் பாட்டிலால் அடித்து தொழிலாளி படுகொலை: நண்பன் கைது

அண்ணாநகர்: கோயம்பேடு நியூ காலனியை சேர்ந்தவர் ஜெய்குமார் (24). இவரது நண்பர் மதுரையை சேர்ந்த கூலி தொழிலாளி சேகர் (44). இருவரும் கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் கஞ்சா அடிப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் ஜெய்குமார் தனது தாய் செல்போன் எண்ணை சேகரிடம் கொடுத்து, ‘‘உனக்கு கஞ்சா வேண்டுமென்றால், இந்த எண்ணில் கூப்பிடு. கொண்டு வந்து தருகிறேன்,’’ என கூறியுள்ளார். அந்த எண்ணில் தொடர்புகொண்ட சேகர், ஜெயக்குமாரின் தாயாரிடம் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த ஜெய்குமார், சேகரை கண்டித்துள்ளார். பின்னர், ஜெய்குமார், தனது மற்ெறாரு நண்பர் திருமங்கலத்தை சேர்ந்த கார்த்திக் (24) என்பவருடன் கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ், கூவம் நதி அருகே கஞ்சா அடித்துள்ளார்.

அப்போது, சேகரை செல்போனில் தொடர்புகொண்டு அங்கு வரவழைத்துள்ளார். அதன்படி அங்கு வந்த சேகர், இவர்களுடன் சேர்ந்து கஞ்சா அடித்துள்ளார். போதையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜெய்குமார், கார்த்திக்குடன் சேர்ந்து, அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து, சேகர் தலையில் சரமாரியாக தாக்கி, கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, தப்பியுள்ளனர். நேற்று காலை கூவம் நதி ஓரத்தில் ஆண் சடலம் கிடப்பதை பார்த்த பொதுமக்கள், கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் சடலமாக கிடந்தது சேகர் என்பதும், ஜெய்குமார், கார்த்திக் ஆகியோர் இவரை கொன்றுவிட்டு தப்பியதும் தெரிந்தது. தலைமறைவாக இருந்த ஜெய்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர். கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

Related Stories: