மாமூல் கேட்டவர்கள் மீது போலீசில் புகார் அளித்ததால் ஆத்திரம்; ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை: 6 ரவுடிகள் கைது

பெரம்பூர்: மாமூல் கேட்டு மிரட்டியவர்கள் மீது போலீசில் புகார் அளித்த விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 6 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சென்னை ஓட்டேரி, கிருஷ்ணதாஸ் சாலையை சேர்ந்தவர் தன்ராஜ் (32), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சபரி (28). இவர்களது குழந்தைகள் முகுந்தன் (6), அம்சிகா (3). நேற்று முன்தினம் காலை தன்ராஜ் தனது குடும்பத்துடன் ஓட்டேரி மங்களபுரம் சேமாத்தம்மன் காலனியில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார். இரவு 10 மணி அளவில் மாமியார் வீட்டின் அருகில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தபோது, 4 பைக்குகளில் வந்த 8க்கும் மேற்பட்டோர், திடீரென தன்ராஜை சுற்றிவளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதை பார்த்து நண்பர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

தன்ராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்தவுடன், மர்ம நபர்கள் அங்கிருந்து பைக்கில் தப்பினர். சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், படுகாயமடைந்த தன்ராஜை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த புளியந்தோப்பு உதவி கமிஷனர் ஜெய்சிங், ஓட்டேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, எஸ்ஐ சஜிபாபா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அதில், தன்ராஜ் மனைவியின் சகோதரர் விக்னேஷ்குமார் என்பவர் ஓட்டேரி, மங்களபுரம் பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார், அதே பகுதியை சேர்ந்த ரவுடிகள் சிலர், அடிக்கடி இந்த கடைக்கு வந்து மாமூல் கேட்டு மிரட்டி வந்துள்ளனர். இதுபற்றி விக்னேஷ்குமார் கடந்த 2 தினங்களுக்கு முன் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடிகளை தேடி வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ரவுடிகள், விக்னேஷ்குமாரை வெட்டுவதற்கு அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாததால் அங்கிருந்த விக்னேஷின் மைத்துனர் தன்ராஜை வெட்டிக்கொலை செய்துள்ளனர். என தெரியவந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக பெரம்பூரை சேர்ந்த அஜய் (19), திலக்ராஜ் (23), விக்கி (21), பால்பிரவீன் (26), சாமுவேல் (20) மற்றும் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த வினோத் (24) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து  சிறையில் அடைத்தனர்.  இது தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Related Stories: