உயர் நீதிமன்றம் அருகே பிரீ பெய்ட் கார் வசதி: வக்கீல்கள் கோரிக்கை

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் அருகே பிரீ பெய்ட் கார் வசதி செய்து தரவேண்டும் என்று தமிழக அரசுக்கு வக்கீல்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சென்னை உயர் நீதிமன்ற வக்கீல் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் மற்றும் சங்க நிர்வாகிகள் நேற்று முன்தினம் சந்தித்தனர். அப்போது, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான வக்கீல்களும், பொதுமக்களும், அதிகாரிகளும் வந்து செல்கிறார்கள்.

இவர்களுக்கு போக்குவரத்து வசதி போதுமானதாக இல்லை. எனவே, விமான நிலையம், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் உள்ளதுபோல் பிரீ பெய்ட் கார் வசதி செய்து தர வேண்டும் என்று வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். பிரீ பெய்ட் கார் வசதிக்காக உயர் நீதிமன்றம் அருகே போதுமான இடவசதி உள்ளது என்றும் வக்கீல்கள் தெரிவித்து அமைச்சரிடம் கோரிக்கை மனுவையும் கொடுத்தனர். அவர்களிடம் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்ததாக வக்கீல்கள் தெரிவித்தனர்.

Related Stories: