சென்னை: பூந்தமல்லி அருகே பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பிக்கொண்டிருந்த கன்டெய்னர் லாரியில் திடீரென தீப்பற்றியது. டிரைவரின் மீது தீப்பிடித்து அவர் எரிந்தபடி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் கேராய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் சிங் (33). தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் கன்டெய்னர் லாரிக்கு டீசல் நிரப்புவதற்காக வந்தார். பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் சுரேஷ் கன்டெய்னர் லாரியில் டீசல் நிரப்பினார்.
அப்போது டீசல் நிரப்பும் பைப்பை ராஜேஷ்குமார் சிங்கிடம் கொடுத்துவிட்டு சென்றதை தொடர்ந்து, அவர் டீசல் நிரப்பிக் கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக திடீரென டீசல் டேங்க் தீப்பிடித்து எரிந்தது. மேலும், தீ மளமளவென ராஜேஷ்குமார் சிங் மீது பரவியது. இதனால் பீதியடைந்த அவர் அங்கும், இங்கும் அலறியபடி ஓடினார்.இதையடுத்து அவர் தீப்பிடித்தபடி ஓடிய காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அவர் மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது முகம், மார்பு, தொடை பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.