சென்னை: தமிழக பாஜ பொது செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் வெளியிட்ட அறிக்கை: இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா (சிஏஏ), தேசிய மக்கள் குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) என்ற மூன்று திட்டங்களை பற்றியும் பொய்யான செய்திகளை பரப்புவதோடு, சிறுபான்மை மக்களிடம் பீதியை உருவாக்கி அவர்களை கொண்டு சட்டவிரோத போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். சிறுபான்மை மக்களிடமும், இளைஞர்களிடமும், மாணவர்களிடமும், குழந்தைகளிடமும் நஞ்சை விதைக்கிறார்கள். இதைக் கண்டு தமிழக மக்கள் வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களும் இந்திய குடியுரிமை சட்டத்தால் இந்தியாவை சேர்ந்த ஒரு இஸ்லாமியருக்கு கூட எந்தவித பாதிப்பும் இல்லை என்று மீண்டும், மீண்டும் தெரிவித்தும், திட்டமிட்டே இஸ்லாமிய மக்களை குழப்புகிறார்கள்.