×

தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் : திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை

சென்னை : குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்ததால் பெரும் தவறு செய்துவிட்டோம் என்று முதலவர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் ஆவேசம் முழக்கம் எழுப்பிவிட்டு தற்போது என்பிஆரில், தாய், தந்தை, பிறந்த இடம் போன்ற கேள்விகளை தவிர்க்க மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதுவது ஏன் என்றும் அந்த அறிக்கையில் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்த அதிமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். குடியுரிமை சட்டம் குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு இருப்பது உண்மை என்றால் அந்த கடிதத்தை ஏன் ரகசியமாக வைத்துள்ளார்கள். குடியுரிமை சட்டத் திருத்தத்தில் உள்ள அடிப்படை விபரங்களைக் கூட தெரிந்து கொள்ள முதல்வர் பழனிசாமி நாட்டம் காட்டவில்லை. மத்திய அரசை எதிர்த்தால் ஊழல் வழக்குகளில் சிறை செல்ல வேண்டியிருக்கும் என்பதால் பதுங்கி நிற்கிறார். சிறுபாண்மையினருக்கு எதிராக எந்த செயலையும் அதிமுக அரசு செய்யாது என்று அலறித்துடித்து இபிஎஸ் - ஓபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிடுகின்றனர். இஸ்லாமியர்கள் இடையே குழப்பம் ஏற்படுத்த திமுக முயற்சிப்பதாக முதல்வர் கூறியது கடும் கண்டனத்திற்குரியது. நாடு எதிர்கொண்டுள்ள விபரீதமான பிரச்சனையில் விளையாட்டுத் தனமாக அறிக்கை வெளியிடுகிறார்கள்,இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.


Tags : government ,Stalin ,DMK ,Tamil Nadu , Citizenship, Amendment, First Palanisamy, Stalin, Report, National Population
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...