கூடலூர்: நீலகிரி மாவட்டம் மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட மாவநல்லாவில் பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இரவு பள்ளி விடுதியில் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் இருந்துள்ளனர். இந்த நிலையில் அருகே இருந்த வனப்பகுதியில் இருந்து இரவு வெளியேறிய காட்டு யானை ஒன்று, பள்ளி வளாகத்தின் சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே வந்து சென்றது.
இதனால் சுவர் சேதமடைந்தது. உள்ளே வந்த யானை அங்குள்ள புளிய மரத்தில் உள்ள புளியங்காய்களை சாப்பிட்டு சென்றது. யானை புகுந்ததால் மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சத்திற்குள்ளாகினர். சுற்றுச்சுவர் உயரம் குறைவாகவும் பழமையானதாகவும் உள்ளதால் யானை உடைத்துக்கொண்டு வந்துவிட்டது. எனவே சுவரை உயர்த்தி கட்டி புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.