சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சுங்க அதிகாரிகள் 3 பேருடன் கடத்தல் கும்பல் 13 பேர் கைது

சென்னை:  சென்னையில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கம் கடத்தி வந்தவர்களுக்கு உடந்தையாக இருந்த 3 சுங்கத்துறை அதிகாரிகளை மத்திய வருவாய்ப் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் மலேசியா, இலங்கை மற்றும் துபாய் ஆகிய நாடுகளிலிருந்து பெருமளவில் தங்கம் கடத்தபடுவதாக மத்திய வருவாய் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கடந்த 19ம் தேதி வருவாய் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 3 நாடுகளில் இருந்தும் 18 பேர் ரூபாய் 5 கோடியே 44 லட்சம் மதிப்பிலான 12 கிலோ 700 கிராம் தங்கம் கடத்தி வந்துள்ளனர். அவர்களை மடக்கிப்பிடித்த அதிகாரிகள் வருவாய்ப் புலனாய்வுப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்துவர முயன்ற போது 50 பேர் அதிகாரிகளை தாக்க முற்பட்டனர். அந்த சந்தர்ப்பத்தில் தங்கம் கடத்தி வந்தவர், அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பி சென்றனர். தாக்குதல் நடத்திய கடத்தல்காரர்களிடம் இருந்த தங்கத்தை வாங்கிச் செல்லவந்த கும்பலை விமான நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே தப்பிச் சென்ற 13 பேரும், வருவாய் புலனாய்வுப்பிரிவு அலுவலகத்தில் தாமாகவே வந்து நேரில் ஆஜராகினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் ராஜன், விகாஷ் சர்மா ஆகியோர் தங்க கடத்தலுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. மேலும், சுங்கத்துறை அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற சதீஷ்குமார், இந்த கடத்தலுக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டதும் தெரியவந்தது. இவர் தினமும் எந்த பயணிகள் தங்கம் கடத்தி வருகிறார்கள் என்ற விவரங்களை பணியில் இருக்கும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து கமிஷன் பெற்றும் வந்துள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 சுங்கத்துறை அதிகாரிகளும், 13 கடத்தல்காரர்களும் எழும்பூர் குற்றவியல் தலைமை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை மார்ச் 6ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. மேலும், தலைமறைவான 5 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: