சென்னை: சென்னையில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கம் கடத்தி வந்தவர்களுக்கு உடந்தையாக இருந்த 3 சுங்கத்துறை அதிகாரிகளை மத்திய வருவாய்ப் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் மலேசியா, இலங்கை மற்றும் துபாய் ஆகிய நாடுகளிலிருந்து பெருமளவில் தங்கம் கடத்தபடுவதாக மத்திய வருவாய் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கடந்த 19ம் தேதி வருவாய் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 3 நாடுகளில் இருந்தும் 18 பேர் ரூபாய் 5 கோடியே 44 லட்சம் மதிப்பிலான 12 கிலோ 700 கிராம் தங்கம் கடத்தி வந்துள்ளனர். அவர்களை மடக்கிப்பிடித்த அதிகாரிகள் வருவாய்ப் புலனாய்வுப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்துவர முயன்ற போது 50 பேர் அதிகாரிகளை தாக்க முற்பட்டனர். அந்த சந்தர்ப்பத்தில் தங்கம் கடத்தி வந்தவர், அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பி சென்றனர். தாக்குதல் நடத்திய கடத்தல்காரர்களிடம் இருந்த தங்கத்தை வாங்கிச் செல்லவந்த கும்பலை விமான நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.