ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பும் வகையில் அமெரிக்கா-தாலிபான் அமைப்பு இடையே ஒரு வார காலம் போர் நிறுத்தம்!

காபூல்: ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பும் வகையில் அமெரிக்கா மற்றும் தாலிபான் அமைப்பு இடையே ஒரு வார போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. தாலிபான் அமைப்பினரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா நடத்திய தாக்குதலால் 2001 முதல் ஆப்கானிஸ்தான் அமைதி இழந்து காணப்படுகிறது. ஆப்கனில் தேர்தல் மூலம் அரசுகள் பதவியேற்றும் தாலிபான் ஆதிக்கம் காரணமாக அமெரிக்க துருப்புகள் அந்நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தாலிபான்கள் உடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாரான அமெரிக்கா, மோதல் காரணமாக பலமுறை பின்வாங்க நேர்ந்தது.

இந்நிலையில், தாலிபான், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் அரசு தரப்பு மத்தியில் ஒரு வார கால போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து பேசிய ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் காணி, முப்படைத் தளபதி என்ற முறையில் எமது படைகள் போர் நிறுத்தத்தை கடைபிடிக்கும் தாலிபான்கள் உடன் ஒருவார காலம் அமைதி காக்கும் நேரம் தொடங்கியுள்ளது. ஒருவார அமைதி காக்கும் நேரத்தில், சுய பாதுகாப்பில் மட்டும் ஆப்கன் படைகள் ஈடுபடும். அல்கொய்தா மற்றும் இதர தீவிரவாத அமைப்புகள் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் தலையிட மாட்டோம். ஆப்கன் படைகள் தற்காப்பு பணியில் மட்டுமே ஈடுபடும், என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, வன்முறை இல்லாத அமைதி நீடித்தால் வரும் 29ம் தேதியன்று தாலிபான் அமைப்புடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறியுள்ளார். அதற்கு பிறகு அமெரிக்கா துருப்புகள் படிப்படியாக வாபஸ் பெறப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் அஷ்ரப் காணி வெற்றி பெற்றது, அதிகாரப்பூர்வமாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரது வெற்றியை ஏற்க மறுத்துள்ள எதிர்க்கட்சிகள் தரப்பு தலைவர் அப்துல்லா அப்துல்லா, தாமே வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார். இதனால் ஆப்கானிஸ்தானில் புதிய உள்நாட்டு குழப்பம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: