சென்னை: சென்னையில் உள்ள சிவாலயங்களில் சிவராத்திரி விழா களைகட்டியது. ஏராளமான பக்தர்கள் விடிய, விடிய தரிசனம் செய்தனர். சிவபெருமானுக்கு உரிய விரதங்களில் மகா சிவராத்திரி விரதம் மிகவும் சிறப்பானது. இந்த புண்ணிய காலத்தில் சிவனின் நாமம் கூறி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் சென்னையில் உள்ள கோவில்களில் சிவராத்திரி விழா நேற்று இரவு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மயிலாப்பூர் கபாலிசுவரர் கோவில், திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில், வடபழனி முருகன் கோவில், பாரிமுனை கச்சாலீசுவரர் கோவில், பாடி திருவலிதாயம் திருவல்லீசுவரர் கோவில் புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவில் உள்பட மாநகரில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடந்தது.