சென்ட்ரல் ரயில் நிலைய உணவகத்தில் தீ விபத்து: அதிகாலையில் பரபரப்பு

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள உணவகத்தில் நேற்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 6வது நடைமேடையில் புட்ரேக் ஐஆர்டிசி பாஸ்ட்புட் யூனிட் கிட்சன் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஊழியர்கள் இட்லி, வடை போன்றவற்றை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது, வடை சுடும் எண்ணெய் மீது தண்ணீர் பட்டு குபீரென தீப்பிடித்தது. அருகில் இருந்த பொருட்கள் மீது தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடையில் வைக்கப்பட்டுள்ள தீயணைப்பு கருவியை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் ஊழியர்கள் தவித்தனர்.

அப்போது பயணி ஒருவர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் சிவநேசன், மற்றும் வெடிகுண்டு நிபுணர் சேதுமாதவன் ஆகியோருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்படி, அவர்கள் விரைந்து வந்து தாங்கள் வைத்திருந்த தீயணைப்பு கருவிகள் மற்றும் கடையில் உள்ள 6 தீயணைப்பு கருவியை பயன்படுத்தி தீயை அணைத்தனர். இதற்கிடையில் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வருவதற்குள் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. விரைந்து தீ அணைக்கப்பட்டதால், பெரும் சேதம் தடுக்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: