லக்னோ: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி வழங்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக் கொள்வதாக உ.பி சன்னி மத்திய வக்பு வாரியம் நேற்று அறிவித்தது. அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அதில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளவும், மசூதி கட்ட வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது. இந்த மாற்று இடத்தை ஏற்கக் கூடாது என உ.பி வக்பு வாரியத்தில் ஆலோசனைகள் கூறப்பட்டன. இந்நிலையில், அயோத்தி சோகாவால் பகுதியில் தானிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்ட கடிதத்தை வக்பு வாரியத்திடம், உ.பி அரசு இந்த மாத தொடக்கத்தில் வழங்கியது. இது குறித்து வக்பு வாரியத்தின் மூத்த தலைவர் பரூக்கி, 7 உறுப்பினர்களுடன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மசூதி கட்ட வழங்கப்படும் 5 ஏக்கர் நிலத்தை நிராகரிக்கும் வாய்ப்பு, வக்பு வாரியத்துக்கு இல்லை. அப்படி நிராகரித்தால், நீதிமன்ற அவமதிப்பாக மாறும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்போம் என நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்தோம். அதனால், நாங்கள் இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மனு செய்யவில்லை. எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றம் இல்லை. உ.பி. அரசு எங்களுக்கு வழங்கிய நிலத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.