சூரத்: மருத்துவ பரிசோதனைக்காக சென்ற மாநகராட்சி பெண் ஊழியர்களை நிர்வாணமாக ஒரே இடத்தில் கும்பலமாக நிறுத்தி வைத்த கொடுமை குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.குஜராத் மாநிலம், பூஜ் நகரில் உள்ள பெண்கள் கல்லூரியில் மாணவிகள் 68 பேருக்கு மாதவிடாய் இருக்கிறதா என அவர்களின் ஆடைகளை அவிழ்த்து சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனை கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இது நடந்த அடுத்த சில தினங்களில் மீண்டும் சர்ச்சைக்குரிய சம்பவம் சூரத்தில் நடந்துள்ளது.சூரத் மாநகராட்சியில் 3 ஆண்டு பயிற்சி முடித்த கிளார்க்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுவது வழக்கம். இந்த பரிசோதனை மாநகராட்சி மருத்துவமனையிலேயே நடக்கும். இது போல், நேற்று முன்தினம் மாநகராட்சி பயிற்சி பெண் ஊழியர்கள் சிலர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பெண் டாக்டர்களால் வலுக்கட்டாயமாக முழு நிர்வாணப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, சூரத் மாநகராட்சி ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநகராட்சி கமிஷனரிடம் புகார் தரப்பட்டுள்ளது. மாநகராட்சி விதிமுறைப்படி, 3 ஆண்டு பயிற்சி முடித்த அனைத்து பயிற்சி ஊழியர்களும் மருத்துவ பரிசோதனையில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும்.