திருப்பூர்: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கடந்த 19ம் தேதி இரவு கேரள அரசு பஸ் கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு புறப்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலை திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வந்தபோது எதிரே வந்த கன்டெய்னர் லாரி சென்டர் மீடியனை தாண்டி அரசு பஸ் மீது மோதியதில் பஸ்சில் பயணம் செய்த 19 பேர் பலியாகினர். 24 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அவிநாசி, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று கேரளா மாநிலம் பாலக்காடு மற்றும் பிற பகுதியில் இருந்து திருப்பூருக்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் மாநகரப்பகுதி மற்றும் அவினாசி பகுதியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினார்கள்.
இதுகுறித்து, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தலைவர் நிர்மலா கூறியதாவது: விபத்தில் பலியானவர்களின் உடல்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டன. நேற்று முன்தினம் காலை சுமார் 11 மணியளவில் துவங்கிய பிரேத பரிசோதனை இரவு 7.30 மணிக்கு நிறைவடைந்தது. இதில், 18 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதால் உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.