×

வடலூரில் ஒருதலைக்காதலால் பயங்கரம்: ராணுவ வீரர் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கண்டக்டர்

நெய்வேலி: கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 21ஐ சேர்ந்தவர் ஜான்விக்டர், ராணுவவீரர். ஜான்விக்டர் மேற்கு வங்காளத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சிலோமி (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சிலோமி வடலூர் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள தனியார் வீடு கட்டும் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். தினமும் நெய்வேலியில் இருந்து தனியார் பேருந்தில் கம்பெனிக்கு செல்வது வழக்கம். அப்போது அதேபேருந்தில் நடத்துனராக சுந்தரமூர்த்தி என்பவர் பணியாற்றி வந்தார். திருமணம் ஆகவில்லை. இதனிடையே சுந்தரமூர்த்திக்கும், சிலோமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சுந்தரமூர்த்தி  சிலோமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். சிலோமி பேருந்தில் வரும்போது, அவரிடம் பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில், சுந்தரமூர்த்தியின் பேச்சின் போக்கு தவறாக இருந்ததாலும், அவரின் செயல்பாடு பிடிக்காத காரணத்தாலும், கடந்த சில நாட்களாக சிலோமி சுந்தரமூர்த்தியிடம் ேபசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

இதுகுறித்து சுந்தரமூர்த்தி சிலோமியிடம் ஏன் என்னிடம் பேசுவதில்லை என கேட்டுள்ளார். அதற்கு சிலோமி நான் 2 குழந்தைகளுக்கு தாய், எனது கணவர் ராணுவ வீரர். உங்களிடம் நான் நல்லவிதமாகத்தான் பழகி வருகிறேன். ஆனால், உங்களின் எண்ணங்கள் தவறாக உள்ளன. ஆதலால் இனி என்னிடம் பேச வேண்டாம் என கூறியுள்ளார். இதனால், சிலோமி மீது சுந்தரமூர்த்திக்கு ஆத்திரம் ஏற்பட்டது. மேலும் சிலோமியை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவே யாருக்கும் தெரியாமல் அருகில் இருந்த பெட்ரோல் பங்க்கில் ஒரு கேனில் பெட்ரோல் வாங்கி வந்து பேருந்தில் வைத்துள்ளார். நேற்று காலை சிலோமி பேருந்தில் இருந்து இறங்கிதான் பணியாற்றும் அலுவலகத்திற்கு சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில், அவரை பின்தொடர்ந்து பெட்ரோல் கேனுடன் சுந்தரமூர்த்தி சென்றுள்ளார். ஆனால், அதற்குள் சிலோமி அலுவலகத்திற்கு சென்றதால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்துள்ளார்.

உடனே, கையில் இருந்த பெட்ரோல் கேனை அப்பகுதியில் மறைத்து வைத்து விட்டு சிலோமி அலுவலகத்துக்கு சென்று, தான் சிலோமியின் உறவினர் என கூறி அவரை அழைத்துள்ளார். அவர் வெளியே வந்து பார்த்தபோது, சுந்தரமூர்த்தி நின்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள் என கேட்டுள்ளார்.  அப்போது, ஏன் என்னுடன் பேசுவதில்லை என கேட்டுள்ளார். அதற்கு சிலோமி இனி உன்னிடம் நான் பேசமாட்டேன் என கூறினார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. இதில், ஆத்திரம் அடைந்த சுந்தரமூர்த்தி தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து சிலோமி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் வலி தாங்காமல் சிலோமி அலறி துடித்தார். சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் துணிகளால் சுற்றி தீயை அணைத்து சிலோமியை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   இதற்கிடையே சுந்தரமூர்த்தியை பொதுமக்கள் பிடித்து வடலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Vadalur ,soldier , Vadalur, unilateral, soldier's wife, petrol, conductor
× RELATED வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமையும்...