×

7 தமிழர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் வரவேற்போம் நடிகர் விஜய் காங்கிரசுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம்: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை: 7 தமிழர்கள் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக் கொள்வோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜே.எம்.எச்.ஹசன் மவுலானா தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும், இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளருமான கிருஷ்ணா அல்லவரு, இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர் ஜெபி மேத்தர், இளைஞர் அணி மாநில முதன்மை செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, வேலையில்லா திண்டாட்டம் குறித்த தேசிய அளவிலான பேச்சுப் போட்டியை தொடங்கி வைத்து பேசினார்.
தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் அமைதியான முறையில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

ஆனால், போராட்டக்காரர்கள் மீது வன்முறையாளர்கள் என்ற முத்திரை குத்தப்படுகிறது. காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தமிழக அரசு கூறவில்லை. எனவே, இதுவும் பல்வேறு அறிவிப்புகளில் ஒன்றாக போய் விடும். ராஜிவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களை விடுவித்தால், சிறைச்சாலைகளில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் கொலைக் குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும். 7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவதை ஏற்றுக் கொள்ள முடியாது.  நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் சேருவது பற்றி பேசப்பட்டதே தவிர அழைக்கப்படவில்லை. விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் மனதார ஏற்றுக் கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : release ,Tamil Nadu ,Congress ,Vijay , 7 Tamils Liberation, Court, Actor Vijay, Tamil Nadu Congress
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்