திருச்சி: ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை விற்க உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதை பக்தர்கள் வரவேற்றுள்ளனர். 1901ம் ஆண்டு தோப்புலான் செட்டியார் என்ற தொழிலதிபர், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 25 ஆயிரம் சதுர அடி நிலத்தை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தானமாக வழங்கியிருந்தார். அதனை அவரது சந்ததியினர் நடத்தும் அறக்கட்டளை விற்க முற்பட 16 ஆண்டுகள் சட்ட போராட்டத்தின் மூலம் அதனை ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் தடுத்து நிறுத்தியுள்ளது. இதனை பக்தர்கள் வரவேற்றுள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பால், நிலத்தை தானமாக வழங்கிய தோப்புலான் செட்டியாரின் நோக்கம் நிறைவேறி இருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். இதேபோல் தமிழகம் முழுவதும் அனைத்து கோவில்களுக்கும் சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை நீதிமன்றங்கள் விரைவில் மீட்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.