கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு தொடங்கியதை அடுத்து பார்வையாளர்களின் வருகை அதிகரிப்பு

திருப்புவனம்: கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு தொடங்கியதை அடுத்து பார்வையாளர்களின் வருகை அதிகரித்துள்ளது. கீழடி மட்டுமின்றி கீழடியை சுற்றியுள்ள கொந்தகை, மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வு செய்யப்பட உள்ளது. தற்போது கொந்தகையில் உள்ள ஈமைக்காட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2015ல் அகழாய்வு பணி தொடங்கியது.  மத்திய, மாநில தொல்லியல் துறையினர் ஐந்து கட்டங்களாக அகழாய்வு நடத்தினர். இதில் பண்டைய தமிழர்களின் நெசவு தொழில், கட்டிடக்கலை, கால்நடை வளர்ப்பு, நீர் மேலாண்மை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன.

இவை 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என கண்டறியப்பட்டது. ஆறாம் கட்ட அகழாய்வுப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் வைத்தார். தொடர்ந்து கொந்தகை, மணலூர், அகரத்தில் அடுத்த வாரம் அகழாய்வு பணிகள் துவங்க உள்ளது. நான்கு இடங்களில் நடக்கும் அகழாய்வுக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் ஒதுக்கியுள்ளது. கீழடியில் இம்மாதம் முழுவதும் நீதியம்மாள் நிலத்தில் நான்கு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெறுகிறது.

100க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள், தொல்லியல் துறை மாணவர்கள் அகழாய்வு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு தொடங்கியதை அடுத்து பார்வையாளர்களின் வருகை அதிகரித்துள்ளது. இங்குள்ள புதர்களில் ஏராளமான அடையாள சின்னங்களை வெளிப்படையாக காண முடிந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இடத்தில் முழுயைமாக அகழாய்வு செய்யும் போது தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு பொருட்கள் கிடைக்கலாம் என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: