வாலிபர் கொலை வழக்கில் சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது

அண்ணாநகர்: அமைந்தகரை ஷெனாய் நகரை சேர்ந்தவர் பிரவின்குமார் (21). இவரது நண்பர் விக்கி. இவர்கள், தங்களது நண்பரான மதுரவாயலை சேர்ந்த மோகன் என்பவரை பார்க்க கடந்த 14ம் தேதி நள்ளிரவு பைக்கில் சென்றனர். அங்கு, முதல் மாடியில் வசிக்கும் மோகனை பார்க்க விக்கி சென்றார். கீழே பிரவீன்குமார் நின்றிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த 6 வாலிபர்கள், பிரவீன்குமாரை பார்த்ததும், ‘பைக் திருட வந்தாயா’’ என கேட்டு சரமாரியாக தாக்கினர். இதில், அவர் மயங்கி கீழே சாய்ந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த விக்கி, பயத்தில் தப்பி ஓடி விட்டார். மறுநாள் காலை வரை மயங்கி கிடந்த பிரவீன்குமாரை பார்த்த அப்பகுதி மக்கள், கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து, பிரவீன்குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று காலை பிரவீன்குமார் இறந்தார். இதையடுத்து, கோயம்பேடு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, பிரவீன்குமாரை அடித்து கொன்ற அதே பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (25), சார்லஸ் (25), சாமுவேல் (18) மற்றும் 3 சிறுவர்கள் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: