வால்டாக்ஸ் சாலையில் உள்ள நயினார் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் : பேரவையில் சேகர்பாபு எம்எல்ஏ பேச்சு

சென்னை: சட்டப்பேரவையில் துறைமுகம் தொகுதி எம்எல்ஏ பி.கே.சேகர்பாபு (திமுக) பேசியதாவது: சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள நயினார் பாலம் என்பது கடந்த 27.12.2016 அன்று இருப்பு பாதைகளை விரிவுப்படுத்துவதற்கும், அகலப்படுத்துவதற்கும் மூடப்பட்டது. தற்போது 3 ஆண்டுகள் முடிந்து, 4ம் ஆண்டை தொடங்கியிருக்கிறது. இது சம்பந்தமாக 2018ம் ஆண்டு உள்ளாட்சி துறை அமைச்சர் கூட 30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்தார். அப்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் அந்த பணம் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. அந்த இடமானது பல்வேறு பகுதிகளை இணைக்கின்ற ஒரு பாலம். அதோடு அரசு பொதுமருத்துவமனைக்ேகா, சென்னை ரயில் நிலையங்களுக்ேகா தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் செல்லும் பகுதி. இன்றைக்கு போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் சிக்கி, திணறி கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றார்கள். ஆகவே, அந்த பணியை விரைவுப்படுத்தி இந்த ஆண்டாவது சென்னை மாநகராட்சி அந்த பணியை விரைந்து முடித்து, பொதுமக்களை போக்குவரத்து நெரிசலில் இருந்து காப்பாற்ற அமைச்சர் முயற்சி செய்ய வேண்டும்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:  ரயில்வே துறையால் பழைய பாலத்தினை இடிப்பதற்கு மட்டும் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு அவை இறுதி செய்யப்பட்டு, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தளவாடங்களை மாற்றியமைத்த பின்னர், பழைய பாலத்தினை இடிப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். புதிய பாலத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் தனியே கோரப்படும் எனவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டதில், இரண்டு ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு, மிக அதிகமான விலைப்புள்ளி பெறப்பட்டதால், இந்த ஒப்பந்தபுள்ளி ரத்து செய்யப்பட்டு, மறு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டிருக்கிறது. வருகிற மார்ச் 6ம் தேதி ஒப்பந்தபுள்ளிகள் இறுதி செய்யப்பட்ட பின்னர், ரயில்வே துறையின் பணிகள் துவங்கப்படும் போது, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கான பணிகளும் துவங்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: