மீண்டும் புதிய உச்சம் ஒரு சவரன் தங்கம் 32,000ஐ நெருங்கியது : 3 நாளில் 608 உயர்ந்தது

புதுடெல்லி: சென்னையில் தங்கம் நேற்று சவரனுக்கு 104 அதிகரித்து 31,824 என்ற புதிய உச்சத்தை எட்டியது தொடர்ந்து 3 நாட்களில் சவரனுக்கு 608 அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. அங்குள்ள தொழில்துறைகள் முடங்கிக் கிடக்கின்றன. தொழிற்சாலைகளில் உற்பத்தி இல்லை. இதன் எதிரொலியாக சர்வதேச பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன. ஸ்திரமற்ற பொருளாதார சூழ்நிலை நிலவுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.  சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் கடந்த 13ம் தேதி ஆபரண தங்கம் மீண்டும் சவரன் 31,000ஐ தாண்டி, 31,112க்கு விற்பனையானது. கடந்த 16ம் தேதி சவரன் 31,392ஐ தொட்டது. 17ம் தேதி சற்று குறைந்தது. ஆனால், மீண்டும் நேற்று முன்தினம் கிராமுக்கு 24 உயர்ந்து 3,926க்கும், சவரனுக்கு 192 உயர்ந்து 31,408க்கும் விற்கப்பட்டது.

சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் (31.103 கிராம்) தங்கம் 1,612 டாலர் வரை உயர்ந்தது. இதன் எதிரொலியாக சென்னையில் ஆபரண தங்கம் நேற்று முன்தினம் கிராமுக்கு 39 உயர்ந்து 3,965க்கும், சவரனுக்கு 312 அதிகரித்து 31,720க்கும் விற்பனையானது. இதுவே நகை வரலாற்றில் உச்சபட்ச விலையாக கருதப்பட்டது. இந்நிலையில் நேற்றும் தொடர்ந்து அதிகரித்துள்ளது. நேற்று சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் 1,614 டாலர் வரை உயர்ந்து, பின்னர் 1,603 டாலர் வரை குறைந்தது. இதற்கேற்ப சென்னையில் ஆபரண தங்கம் நேற்று காலை சவரனுக்கு 120 அதிகரித்து 31,840 என்ற புதிய உச்சத்தை எட்டியது. மாலையில் சற்று குறைந்தது. இதன்படி, முந்தைய நாள் விலையை விட 104 உயர்ந்து 31,824க்கு விற்பனை செய்யப்பட்டது.

Related Stories: