×

தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக பயிர் காப்பீடு மானிய திட்டத்தில் மத்திய அரசு பங்கு பாதியாக குறைப்பு

* பயிர் காப்பீடு இனி கட்டாயம் இல்லை * அரசு முடிவால் விவசாயிகள் அதிர்ச்சி

புதுடெல்லி: விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு மானிய திட்டங்களில் மத்திய அரசின் பங்கு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.    பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, மத்திய அரசின் பயிர்க்காப்பீட்டு திட்டங்களை அமலாக்குவதில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதால், பசல் பீமா,  மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க்காப்பீட்டுத் திட்டம் ஆகியன திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, காப்பீடு நிறுவனங்களின் செயல்பாட்டு ஒதுக்கீடு 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும். மத்திய அரசின் மானியம் பாசன வசதி  இல்லாத பகுதிகள் அல்லது பயிர்களுக்குப் பிரீமியம் விகிதம் 30 சதவீதமாகவும், பாசன வசதி உள்ள பகுதிகள் அல்லது பயிர்களுக்கு 25 சதவீதமாகவும் இருக்கும். 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் பாசன வசதி பெற்ற மாவட்டங்கள், முழுமையான பாசன வசதி பெற்ற பகுதி அல்லது மாவட்டமாகக் கருதப்படும். வரையறுக்கப்பட்ட கால வரம்புக்குப் பின்னால் சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனங்களுக்குப்  பிரீமியம் மானியத்தை விடுவிக்க மாநில அரசுகளால் தாமதம் ஏற்படும் பட்சத்தில் அடுத்த பருவங்களுக்கு இந்தத் திட்டத்தை அமலாக்க அனுமதிக்கப்படமாட்டாது. கரீப் (ஏப்ரல் முதல் செப்டம்பர்) பருவத்திற்கான கடைசித் தேதி மார்ச் 31  ஆகவும், ரபி (அக்டோபர் முதல் மார்ச்) பருவத்திற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 ஆகவும் இருக்கும்.

 வடகிழக்கு மாநிலங்களுக்குத் தற்போதுள்ள 50:50 என்ற மத்திய அரசின் பிரீமிய மானிய விகித பங்கு 90 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. திருத்தியமைக்கப்பட்ட நடைமுறைகள் 2020 கரீப் பருவத்திலிருந்து செயல்பாட்டுக்கு வரும் வன  மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை இவ்வாறு முடிவு செய்துள்ளதால், பயிர் காப்பீடு திட்டத்தால் பயனடைந்த அல்லது எதிர்வரும் காலங்களில் பயனடையக்கூடிய விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  காரணம், மத்திய அரசு சார்பில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வந்த  பயிர் காப்பீடு திட்டங்களின் பங்கை பாதியாக குறைத்துள்ளது. அதன்படி, ஏற்கனவே 50 சதவீத (நீர்பாசன பகுதி) பிரீமிய மானியத்தின் பங்கை 25%ஆகவும், நீர்ப்பாசனம் செய்யப்படாத பகுதிகளுக்கு 30%ஆகவும் குறைத்துள்ளது. 2016ல் சல் பீமா திட்டம் தொடங்கியபோது, பயிர் கடன்கள் உள்ள அனைத்து  விவசாயிகளும் இதில் சேர கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், பெரும் காப்பீடு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை செலுத்துவதில் அதிக ‘க்ளைம்’ தொகை கேட்பதால் நஷ்டத்தை சந்தித்தாக கூறப்படுகிறது.

 அதையடுத்து 2019-20ல் ஐசிஐசிஐ லோம்பார்ட், டாடா ஏஐஜி உள்ளிட்டவை இத்திட்டத்தில் இருந்து விலகியுள்ளன. விவசாயிகள் செலுத்தும் பிரீமியத்தில் கரீப் பயிர்களுக்கு காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 2 சதவீதமும், ரபி பயிர்களுக்கு 1.5  சதவீதமும், பணப்பயிர்களுக்கு 5 சதவீதமும் செலுத்துகின்றனர். மானிய பிரீமிய நிலுவை தொகையை மத்திய, மாநில அரசுகள் சமமாகப் பிரித்துக் கொண்டன. மத்திய அரசின் மறுசீரமைப்பு அறிவிப்பால், மத்திய அரசின் நிதிச்சுமை குறையும்,  மாநிலங்களுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும். பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் இனி இன்சூரன்ஸ் செய்வது கட்டாயமில்லை என்பதால், அவர்கள் பயிர் காப்பீடுக்கான உத்தரவாதமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று நிபுணர்கள்  தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், ‘‘மத்திய அரசின் காப்பீடு திட்டங்களில் சேரும் 58% விவசாயிகள் கடனாளிகள்; அவர்கள் இனி கட்டாயமாக காப்பீடுத் திட்டத்தில் சேரவேண்டியது இல்லை.  மாநிலங்களுடனான ஆலோசனை, அனைத்து காப்பீடு நிறுவன பங்குதாரர்களின் ஆலோசனையின் அடிப்படையில் திட்டத்தில் மத்திய அரசு மறுசீரமைப்பு மாற்றம் செய்துள்ளது’’ என்றார்.

Tags : government , private ,companies,subsidy scheme, half
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்